நூருல் ஹுதா உமர்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ள சம்பளம் மற்றும் ஓய்வூதியங்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினராக சாய்ந்தமருதைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கல்வி நிர்வாக சேவை அதிகாரியும் மூத்த ஊடகவியலாளருமான ஏ.எல்.எம். முக்தார் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்வித் துறையில் பல தசாப்தங்களாக சேவையாற்றியதுடன், கல்வி நிர்வாகத்திலும் ஊடகத் துறையிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ள முக்தார் அவர்களின் அனுபவம் மற்றும் அர்ப்பணிப்பை மதித்தே இந்த உயரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
கல்வி, நிர்வாகம் மற்றும் சமூகப் பணிகளில் நீண்டகால அனுபவம் பெற்றவரான அவர், தேசிய மட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆணைக்குழுவில் இணைக்கப்பட்டிருப்பது கிழக்கு மாகாண மக்களுக்கும் பெருமை சேர்க்கும் விடயமாகக் கருதப்படுகிறது.
அஹமத் லெப்பை மொஹம்மது முக்தார் அவர்களின் நியமனம் அவரது நீண்டகால சேவைக்கான அங்கீகாரமாக அமைந்துள்ளது.
மேலும், அவரது ஆழமான அறிவு, நிர்வாக அனுபவம் மற்றும் சமூகப் பார்வை என்பன ஆணைக்குழுவின் பணிகளுக்கு வலுச்சேர்க்கும் என்றும், நாட்டின் அரச சேவை மற்றும் ஓய்வூதிய மறுசீரமைப்புகளுக்கான பரிந்துரைகளில் பயனுள்ள பங்களிப்பை வழங்குவார் என்ற நம்பிக்கையையும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
தேசிய மட்டத்திலான இந்த உயரிய பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள அஹமத் லெப்பை மொஹம்மது முக்தார் அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

